அத்தியாயம் 23:
சஞ்சனாவின் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரமே ஆகியிருந்த நிலையில் விஸ்வநாதன் வீடு மீண்டும் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்தது.
அன்றிரவு யாரும் எதிர்பாராத நேரத்தில் நெற்றியில் ரத்தம் வழிய வந்து நின்றவனைக் கண்டு அனைவரும் பதறிப்போய் என்னவென்று கேட்க.. “ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்..” என்று கூறியவன் யாரையும் கண்டுகொள்ளாது தனது அன்னையை மட்டும் அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
மறுநாள் காலையில் பேரனுக்கு அடிபட்டிருக்கிறதே என்று பார்க்கப்போன விஸ்வநாதனிடம் இன்னும் இரண்டு வாரத்தில் தனக்கும் மித்ராவுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்குமாறும் கூற பேரனை குழப்பத்துடன் பார்த்தவர், “என்னப்பா இது... இப்படி திடீர்னு சொல்ற... ரெண்டு வாரத்துல எப்படி கல்யாண ஏற்பாடு பண்ண முடியும்...” என்று கேட்க முடிய வேண்டும் என்றான் பேரன்.
பல வருடங்களுக்கு பிறகு குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் அதனை இப்படி அவசர அவசரமாக செய்துவிடமுடியாது. அனைத்து சம்பிரதாயங்களையும் சிறப்பாக செய்து நல்லபடியாக திருமணத்தை நடத்தி முடிப்பதற்கு இரண்டு வாரங்கள் போதாதென்று அவர் எவ்வளவோ கூறியும் அவன் அதனை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.
இரண்டு வாரங்களில் திருமணம் நடந்தே ஆக வேண்டும் அதுவும் மிகவும் சிம்பிளாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவாக கூறிவிட இதற்குமேல் இவனிடம் பேசி வேலைக்காகாது என்பதை உணர்ந்தவர் மற்றவர்களிடமும் விடயத்தை கூற யாருக்குமே இந்த அவசர ஏற்பாட்டில் உடன்பாடில்லா விட்டாலும் ஆதி முடிவெடுத்து விட்டால் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டான் என்பது தெரிந்திருந்ததால் மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கத் தொடங்கினர்.
அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் அவசரகதியில் செய்யப்பட்டு திருமணத்திற்கு ஐந்தே நாட்கள் மீதமிருக்கும் நிலையில் மணப்பெண்ணான மித்ராவும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தாள்.
வந்தவள் யாருடனும் பேசாமல் ஒருவித இறுக்கமான மனநிலையில் வலம்வர அவனும் அப்படித்தான் இருந்தான். அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க நிர்மலா தேவிக்கு தாளவில்லை. தன் குடும்பத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் திருமணம் அதை எப்படியெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார் “இதுங்க ரெண்டுபேர் மனசுலயும் என்ன இருக்குதுனே புரிய மாட்டேங்குது..” என்று நாள் முழுக்க விஜயாவிடம் புலம்பிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.
மித்ராவுக்கான ஆடைகளை வீட்டிற்கே வரைவழைத்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். சந்திரலேகாதான் ஒவ்வொரு புடவையாக எடுத்து மகள் மீது வைத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். மித்ரா ஒன்றை கூட தொட்டு பார்க்காமல் ஏதோ யோசனையில் உட்கார்ந்திருக்க அவளை கோபமாக பார்த்த நிர்மலா “டேய் தனா... உன் பொண்ணுக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல இஷ்டம்தானா..??” என்று தன் மகனிடம் கேட்டார்.
“எதுலயும் ஒட்டாமலே உட்கார்ந்திருக்கா பாரு... முகத்துல கல்யாண களையே இல்ல...”
அவரது இந்தப் பேச்சு சந்திரலேகாவின் காதுகளில் விழுந்துவிட “என்னங்க என் பொண்ணு நேத்து தான அமெரிக்கால இருந்து வந்தா.. வந்ததும் வராததுமா அவளுக்கு கொஞ்சம் கூட ரெஸ்ட் கொடுக்காம ஆளாளுக்கு ஏதேதோ பண்ண சொன்னா அவ வேற எப்படி இருப்பா...” என்று அவளும் பதிலுக்கு எகிற அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் தனஞ்செயன்தான் மாட்டிக் கொண்டு விழித்தார்.
தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல மித்ரா கண்டு கொள்ளாமல் எழுந்து சென்று விட. இறுதியில் விஸ்வநாதன் வந்து சத்தம் போட்டுத்தான் இருவரையும் அடக்க வேண்டியதாகிப் போனது.
இப்படியே கல்யாண வேலைகளில் நிர்மலாவுக்கும் சந்திராவுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தன. மற்றவர்களும் பலமுறை தடுத்துப் பார்த்தும் முடியாமல் போக எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டனர்.
##############################
தன்னுடைய ஃபோனில் சஞ்சயின் அழைப்பை பார்த்ததும் அவன் எதற்காக அழைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் பதிலளிக்காமல் அப்படியே விட்டுவிட அவனும் விடாமல் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்ததால் வேறு வழியில்லாமல் எடுத்துப் பேசினாள் நித்திலா.
“நீ இன்னும் கிளம்பலயா நித்து..??” அவள் அழைப்பை ஏற்றதும் முதலாவதாக அவன் கேட்டது இதைத்தான்.
“எங்க கிளம்ப சொல்ற சஞ்சய்..??”
“நான் சொல்றது எதையும் கேட்க கூடாதுனு முடிவோட இருக்கியா நீ... நான் உன்ன அப்பவே பெங்களூர் போக சொல்லிட்டேன்.. நீ எதுக்கு இன்னும் சென்னைலயே உட்கார்ந்திருக்க...”
“சஞ்சய் நான் வந்து டூ வீக்ஸ் கூட ஆகல.. நீ சொல்ற மாதிரியெல்லாம் அப்படி அவசரமா கிளம்பிட முடியாது...”
“நீ ஏன் நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்டேங்குறே நித்து... நீ வந்த அதே நாள்ள அவரும் வந்திருக்காரு... வந்ததும் வராததுமா தாத்தா கிட்ட கல்யாண ஏற்பாடு வேற பண்ண சொல்லியாச்சு.. எனக்கு எதுவுமே சரியா படல.. நீ முதல்ல கிளம்பு...”
“உளறாத சஞ்சய்.. நாலு வருஷம் கழிச்சி இப்போத்தான் வந்திருக்கேன்... இப்போ இவ்வளவு அவசரமா கல்யாணத்துக்கு கூட இருக்காம கிளம்பினா எல்லாரும் என்ன நினைப்பாங்க...”
“மத்தவங்க எதையாவது நினைச்சி தொலைக்கட்டும்.. நீ அங்க இருக்க வேணாம் அவ்வளவுதான்... வேணும்னா இந்த கல்யாணம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறமா திரும்பி வா... இப்ப போ ப்ளீஸ்...” அவளிடம் கெஞ்சினான் சஞ்சய். “உனக்கு அவர பத்தி தெரியும்ல,,, அவர் நினைக்கிறது நடக்கனும்னா அதுக்காக என்ன வேணா பண்ணுவாரு...”
‘தெரியும் சஞ்சய்... அதுக்காகத்தான் நான் இங்கேயே இருக்கேன்...’ என்று மனதில் நினைத்தவள் “இதோ பார் சஞ்சய்... அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க போறாங்க... இதுல என்னை என்ன பண்ணிடுவார்னு நீ சொல்ல வர்ர... இன்னும் அவருக்கு பயந்து ஓடி ஒளிஞ்சிக்க சொல்றியா... பழைய குப்பையைல்லாம் நான் எப்பவோ தூக்கி தூர போட்டுட்டாச்சு... நீ இப்போ வந்து ஒன்னு ஒன்னா கிளரிக்கிட்டு இருக்காதே..”
கோபமாக கூறியவள் அவன் மேலும் ஏதோ சொல்ல வர இணைப்பை துண்டித்து அவனது நம்பரையும் பிளாக் செய்துவிட்டாள்.
அவளுக்கு அறைக்குள் இருப்பதே மூச்சு முட்டுவதுபோல் இருக்க பால்கனியில் சென்று சற்று நேரம் நின்றிருந்தாள்.. இரவு நேர குளிர் காற்று ஊசியாய் உடலை துளைப்பதை கூட உணர முடியாமல் அவளது மனம் எதையோ நினைத்து கொதித்துக் கொண்டிருந்தது.
வெகு நேரத்திற்கு பிறகு அறைக்குள் செல்ல நினைத்து திரும்பிய போது தோட்டத்தில் மித்ரா நடந்து செல்வது தெரிந்தது. இந்த நேரத்தில் எங்கு செல்கிறாள் என்று யோசனையுடன் பார்க்க சாரதாவின் வீட்டுப் பக்கம்தான் சென்று கொண்டிருந்தாள்.
அந்தப் பக்கத்திலிருந்து ஆதி நடந்து வருவதும். ஒருவரையொருவர் நெருங்கியதும் மித்ராவின் கையை பிடித்து தன் நெஞ்சோடு சேர்த்து கோர்த்துக் கொண்டு அவளிடம் ஏதோ பேசிக்கொண்டிருப்பதும் தெரிய. இருவரையும் வெறித்துப் பார்த்தபடி பால்கனியில் நின்றிருந்தாள் நித்திலா. பின்பு என்ன நினைத்தாளோ அறைக்குள் சென்று சடாரென கதவை அறைந்து சாத்தினாள்.
“தேவ்...” அவன் தோளில் சாய்ந்து கொண்டு அழைத்தாள் மித்ரா.
“சொல்லு பேபி...”
“எல்லாம் சரியா வரும்ல... எனக்கு என்னமோ மனசே சரியில்ல..”
“நீ எதுக்கு கண்டதெல்லாம் நினைச்சு குழப்பிக்கிற... அதான் நான் இருக்கேன்ல..”
“அதில்ல தேவ்.. அந்த சௌர்யா வேற வந்திரு...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே “ஷட் அப் மித்ரா..” என்று சீறினான் அவன் “இப்போ எதுக்கு அவன பத்தி பேசுற...”
“தப்பா எதுவும் நடந்துடாதேடா...” கலக்கத்துடன் கேட்டாள்.
“ஐ ப்ராமிஸ் யூ மித்ரா... தப்பா எதுவும் நடக்காம நான் பார்த்துக்கிறேன்...” என்று கூறி தன் தோளில் சாய்ந்திருந்த அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் மனதுக்குள் “சாரி பேபி..” என்று சொல்லிக் கொண்டான்.
########################
“எனக்குனு எங்கே இருந்துடா வர்ரானுங்க...” கையிலிருந்த ஃபோனை நிலத்தில் அடித்து உடைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.. “அப்போ ஆதின்னு ஒருத்தன் வந்தான்... இப்போ ஆர்யான்னு இன்னொருத்தன்...”
“டேய் மாம்ஸ் ஆதிக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்... அவனுக்கு நெக்ஸ்ட் வீக் அந்த மித்ரா பொண்ணு கூட மேரேஜ்.. அதுவும் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணி இப்போ கல்யாணம் பண்ணிக்க போறாங்க... இப்ப எதுக்கு நடுல அவன இழுக்குற..”
“இப்ப அதுவாடா முக்கியம்... எவன் எவள கட்டிக்கிட்டா எனக்கென்ன.... என் நிலாக்கு ஒருத்தன் ரிங் போட்டுட்டு போயிருக்கானே... அவன் யாருடா அவன்...” பல்லைக் கடித்தான் அர்ஜுன்.
“ரிங் தானே மச்சி போட்டிருக்கான்... என்னமோ கல்யாணமே பண்ணிட்டா மாதிரி நீ எதுக்கு டென்ஷன் ஆ.. ஆ...” க்ரிஷ் சொல்லி முடிப்பதற்குள் அவனது கழுத்தை பிடித்திருந்தான் அர்ஜுன்..
“அவளுக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்கூட தான்டா நடக்கும்.. பேச்சுக்கு கூட அவள இன்னொருத்தனோட சேர்த்து பேசாதே...” வார்த்தைகளை கடித்து துப்பினான்.. “அவ என்னோட நிலாடா... எனக்கு மட்டும்தான் சொந்தம்..” அவனது கைகளின் அழுத்தம் கூடிக்கொண்டே செல்ல க்ரிஷுக்கு மூச்சுத்திணற ஆரம்பித்து விட்டது..
சிவாவும் ப்ரசாத்தும் அர்ஜுனிடம் இருந்து க்ரிஷை பிரித்து விட்டவர்கள் அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.. அர்ஜுன் எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை.. வெறி பிடித்தவனைப் போல் உட்கார்ந்திருந்தான்.
இந்த நான்கு ஆண்டுகளில் வேராகி, விழுதாகி, விருட்சமாகி வளர்ந்து நின்றது அவனது காதல். நித்திலாவின் இந்த சதாரண பெண் பார்க்கும் படலத்தை கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய நிலாவை இன்னொருவன் தன் வருங்கால மனைவியாக மனதில் நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணும்போதே அவனுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவது போல் இருந்தது.
அவனது நண்பர்கள் குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பாட்டில்கள் கண்ணில் பட அதில் ஒன்றை எடுத்தவன் மடமடவென தொண்டையில் சரித்துக் கொண்டான். அதைக் கண்டு பதறிப்போன சிவாவும் ப்ரசாத்தும் அவனை தடுக்க முயல அவர்களை பிடித்து தள்ளி விட்டவன் ஒவ்வொரு பாட்டிலாக காலி செய்ய ஆரம்பிக்க அவனை நெருங்க முடியாது என்பதை உணர்ந்த சிவா எஞ்சியிருந்த மற்ற பாட்டில்களை எடுத்து உடைத்துவிட அதற்குள் இருந்த திரவம் அனைத்தும் தரையில் சிந்திச் சிதறியது.
“எதுக்குடா உடைக்கிற... கொடுடா..” என்று அவனை நோக்கி அடிக்க வர மற்ற நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மடக்கிப் பிடித்தனர். போதையில் இருந்தவனால் அவர்களை எதிர்க்க முடியாமல் போக அனைவரையும் கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான்.
ஒருவழியாக அவனை சமாளித்து வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்க மகனது கோலத்தை கண்ட வரதராஜன் அதிர்ந்து போய்விட்டார்.
“என்னடா இது...??” என்று அவர் பதறிப்போய் கேட்க, “ஒன்னுமில்லப்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க..” என்று அவரை சமாதானப்படுத்திய சிவா “நீங்க அவன ரூம்க்கு கூட்டிட்டு போங்க..” என்று மற்ற நண்பர்களிடம் கூறிவிட்டு வரதராஜனை அழைத்துச் சென்று அவரிடம் விடயத்தை கூறினான்.
“என்னடா இது... அந்தப் பொண்ணு இப்பத்தானே படிப்ப முடிச்சிட்டு திரும்பி வந்திருக்கு... அதுக்குள்ள யாருடா வந்து பேசி முடிச்சிட்டு போனது..”
“அவங்க சொந்தக்கார பையனாம்ப்பா... யார் என்னன்னு ப்ரசாத் தான் எல்லாம் விசாரிச்சு வெச்சிருக்கான்.”
“நித்திலா ஊருக்கு கிளம்புறதுக்குள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்கலாம்னு இருந்தேன்டா..” வரதராஜனின் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
“நீங்க ஒன்னும் வருத்தப் படாதீங்கப்பா... எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... அவங்க பொண்ணு பார்த்துட்டு தானே போயிருக்காங்க... வேற எதுவும் இன்னும் முடிவாகல..”
“ம்ப்ச்.. அவங்க சொந்தக்கார பையன்னு சொல்ற.. அவன வேணாம்னு சொல்லிட்டு இவனுக்கு கட்டி வைப்பாங்கனு நினைக்குறியா... அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல...” என்று தாடையை தடவியவர் “இதுக்கு வேற ஏற்பாடுதான் பண்ணனும்..”
“அப்பா அவசரப்பட்டு நம்ம எதுவும் பண்ண வேணாம்... அடுத்த வாரம் அவங்க வீட்டுல கல்யாணம் இருக்கு... எல்லாம் முடிஞ்சதும் போய் பேசி பார்க்கலாம்... அப்பவும் அவங்க ஒத்துக்கலைனா அதுக்கப்புறம் மத்தத யோசிக்கலாம்...”
“இவன் இன்னும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லாம இருக்கானேடா...”
அந்தக் கவலை சிவாவுக்கும் இருக்கத்தான் செய்தது. ஒருவேளை நித்திலா அர்ஜுனின் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்... அதற்குமேல் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு.
“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்ப்பா...” என்று அவரை சமாதானப் படுத்தியவன் நண்பர்கள் வருவதைக் கண்டு வரதராஜனிடம் விடைபெற்று கிளம்பினான்.
அவர்கள் சென்றதும் மகனது அறைக்குச் சென்று பார்த்த வரதராஜனுக்கு கண்கள் கலங்கியது. எதையோ சொல்லி புலம்பியபடி கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக குடியை மறந்து சொக்கத்தங்கமாக இருந்த அவரது மகன் இப்போது இந்த கோலத்தில் கிடப்பதை கண்டு அவர் மனம் வலித்தது.
அவனது சட்டையின் மேல் பட்டன்கள் போடப்படாமல் லேசாக விலகி இருக்க அவனது மார்புப் பகுதியில் நிலா என்று டாட்டூ போடப்பட்டிருந்தது. அதை கண்டவருக்கு என்ன செய்தாவது தன் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தே தீர வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது..
நான்கு ஆண்டுகளாக அவன் பெங்களூருக்கும் சென்னைக்கும் அலையாய் அலைந்ததும், அருணாவும் சங்கரும் சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் என்பதால் அவர்கள் செல்லுமிடமெல்லாம் தேடிச் சென்று டொனேஷன் என்ற பெயரில் பணத்தை வாரியிறைத்ததும் ரத்த தானம், இலவச மருத்துவ முகாம் என்று எத்தனையோ நல்ல காரியங்கள் செய்து அவர்கள் மனதில் இடம்பிடிக்கவே அவன் படாத பாடு பட வேண்டியிருந்தது.
அவர்களுடன் பழகி கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகுதான் அவனால் நித்திலாவை கண்ணால் காண முடிந்தது. அதுவும் அவள் தன்னை அடையாளம் கண்டுவிடுவாளோ என்று பயந்து பயந்து அவர்கள் வீட்டுக்கு சென்றதும் நல்ல வேளையாக அவளுக்கு அவனை நினைவில் இல்லை.
அதன் பிறகு அவளை பல இடங்களில் பின் தொடர்ந்து எதேர்ச்சையாக சந்திப்பது போல் பார்த்து, பேசி சாதாரண நண்பன் என்ன நிலையை அடைவதற்கு அவனுக்கு மேலும் ஒரு வருடம் எடுத்தது.
இப்படி நான்கு ஆண்டுகளாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக நித்திலாவை நெருங்கி மிக நெருக்கமான என்றில்லாவிட்டாலும் ஓரளவுக்கு நெருங்கிய நண்பன் என்ற வட்டத்துக்குள் இப்போதுதான் வந்துவிட்டிருக்கிறான். இந்த நேரத்தில் இப்படியாகி விட்டதே என்று மனம் மருகினார் வரதராஜன்.
நித்திலாவை பற்றிய எந்தவொரு விடயத்தையும் அவன் தந்தையிடம் சொல்லாமல் விட்டதில்லை. அவரே இரண்டு முறை பெங்களூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். இந்த நிலைக்கு வருவதற்கே மகன் எவ்வளவு பாடுபட்டான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அப்பேர்ப்பட்ட அவனது காதலை நிறைவேற்ற முடியாமல் போனால் அவர் என்ன தந்தை.. “என்ன நடந்தாலும் சரி... நீ ஆசைப்பட்ட பொண்ணு உனக்கு கட்டி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு அர்ஜுன்..” என்று உறங்கிக் கொண்டிருந்த மகனை பார்த்து கூறினார். ஆனால் தன் மகனுக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை தானே வற்புறுத்தி செய்து வைக்கப்போகிறோம் என்பது அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
#######################
ஆதி, மித்ரா திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்த நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உறவினர்கள் பலரது வருகையால் வீடே நிறைந்து காணப்பட்டது.
சௌர்யாவின் அன்னையும் விஸ்வநாதன் நிர்மலா தம்பதியரின் நான்காவது மகளுமான சாறுலதா அவளது கணவர் மற்றும் இளைய மகன் சூரஜுடன் அன்றுதான் வந்து சேர்ந்தாள்.
அருணாவும் சங்கரும் கூட திருமணத்திற்கு வருவதாக நித்திலாவிடம் கூறியிருந்தனர். நிர்மலா அழைத்த போது ஏதேதோ காரணம் கூறி மறுத்துவிட்டு வராமல் இருந்தவர்கள் இப்போது ஆதியே அவர்களை அழைக்கவும் அவர்களால் மறுக்க முடியவில்லை (அவன் எதுக்கு இவங்கள கூப்பிடுறான்
) அதனால் நிச்சயம் திருமணத்தி வந்து விடுவதாக வாக்களித்தனர்.
எல்லாமே சிறப்பகத்தான் சென்று கொண்டிருந்தது. தோழி ஒருத்தியை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற மித்ரா வீட்டுக்கு திரும்பாமல் போகும் வரை....
அன்று மாலை நான்கு மணியளவில் சந்திரா சொல்ல சொல்ல கேட்காமல் இப்போது வந்துவிடுவதாக கூறிவிட்டு சென்றவள் ஏழு மணியாகியும் திரும்பி வராததால் சந்திராவுக்கு பதற்றம் பிடித்துக் கொண்டது. அவளுக்கு எத்தனை முறை அழைத்துப் பார்த்தும் அழைப்பை ஏற்காததால் பயத்தில் கணவரிடம் கூற அவளை திட்டிய தனஞ்செயன் அஜய்யிடம் கூறி மித்ராவுக்கு அழைத்துப் பார்க்க சொல்ல அவனுடைய அழைப்பும் ஏற்கப்படவில்லை.
மெல்ல மெல்ல இந்த விடயம் வீட்டினர் அனைவருக்கும் பரவிவிட அனைவரும் ஆளாளுக்கு சந்திராவை கேள்வகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் ஏழரை மணியளவில் குடும்பத்தினர் அனைவரின் வாட்ஸ்அப்பிற்கும் ஒரே நேரத்தில் மித்ராவிடமிருந்து காணொளி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் கொஞ்ச நாட்களாகவே தனக்கும் ஆதிக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் இந்த திருமணத்தில் துளிக்கூட இஷ்டமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியிருந்தாள். அவளே பேசி அனுப்பியிருந்த வீடியோவை பார்த்து அனைவரும் நம்பமுடியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
தொடரும்.......
‘ஆதியின் நிலா’ அத்தியாயம் 23 போட்டாச்சு... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்...