பானுரதி துரைராஜசிங்கம்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலைப் பிரதேசத்தின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மின்குமிழ்கள் ஒளிர்ந்து இருளை விலக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தன.
பழத் தோட்டத்திலும் அழகழகாக மின்குமிழ்கள் ஒளிர விடப் பட்டிருந்தன.
சிறிது நேரம் அந்த ஒளிகளின் வர்ணஜாலத்தையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.
பார்வை தான் ஒளி விளக்கில் பதிந்து இருந்ததே தவிர, அவளது சிந்தை வேறு எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. நிறையக் குழப்பங்கள் மனதினுள் குமிழியிட்டுக் கொண்டிருந்தன. இடை நடுவே வீட்டு வாசலைப் பார்த்தவள்
"இத்தனை நேரம் அப்படி என்ன தான் பேசுகிறார்களோ தெரியவில்லை"
எனச் சலித்தும் கொண்டாள்.
லேசாகக் கால்கள் வலிப்பது போலத் தோன்றவே தான் அமர்ந்திருந்த நீளமான மரக் கதிரையில் கால்களை மடக்கிச் சப்பணமிட்டுக் கொண்டு தொலைவில் இருளில் தெளிவு இல்லாமல் தெரிந்த மலையின் வடிவத்தை நோக்கத் தொடங்கினாள்.
"தாமதத்திற்கு மன்னித்து விடு கஸ்தூரி"
என்றபடி அந்த நீளமான மரக் கதிரையில் ஒரு ஓரமாக வந்து அமர்ந்து கொண்டான் சூரியன்.
மன்னிப்புக் கேட்டபடி அவன் அமர்ந்ததைக் கூட அறியாமல் இருந்தவளைத் தொட்டுத் திருப்பவதற்காகக் கையை நீட்டியவன் ஒரு நொடி தயங்கி "கஸ்தூரி" என்று பலமாக அழைத்தான்.
அவன் அழைத்த சத்தத்தில் திடுக்குற்றுத் திரும்பியவள் அப்போது தான் அவனையே பார்த்தாள்.
"என்ன?"
"என்ன என்ன நீ தானே என்னை ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வரச் சொன்னாய்"
"எப்போது வருகிறேன் என்று சென்றீர்கள்... எப்போது வந்திருக்கிறீர்கள்? கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக இங்கே அமர்ந்திருக்கிறேன்..."
"அடடா மன்னித்து விடு கஸ்தூரி... ரொம்ப முக்கியமாகப் பேசிக் கொண்டு இருந்ததில் நேரத்தைக் கவனிக்கவில்லை... மன்னித்து விடு"
"சரி சரி விடுங்கள்..."
"சரி அவ்வளவு அவசரமாக எதற்கு வரச் சொன்னாய்... என்ன விஷயம்"
"இதை எப்படிச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை... ஆனால் நான் நினைப்பது போல் தானா என்றும் குழப்பமாக இருக்கிறது... நான் நினைப்பது போல இருந்தால்... கடவுளே அதை எப்படிச் சொல்வது..."
"ஏய்... இப்போது நீ என்ன தான் சொல்ல வருகிறாய்... எனக்கு ஒரு மண்ணும் புரியவில்லை... கொஞ்சமாவது தெளிவாகச் சொல்லு..."
என்றவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் கஸ்தூரி.
"இதென்ன இவள் இப்படிப் பார்க்கிறாளே இதற்கு என்ன தான் அர்த்தம்... ஆனால் ஏதோ தீவிரமாக யோசிக்கிறாள் என்பது மட்டும் புரிகிறது"
என்பது போலச் சூரியன் அவளையே பார்த்திருந்தான்.
தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு மெல்ல எழுந்து கொண்ட கஸ்தூரி சில நொடிகள் அங்கும் இங்கும் நடந்தாள்.
சூரியன் அமைதியாக அவளையே தான் பார்த்திருந்தான்.
அவனுக்கு முன்னால் நடை பயின்று கொண்டிருந்தவள் திடீரென நின்று அவனைப் பார்த்தாள்.
"உங்களின் இரண்டாவது அண்ணா மகேந்திரவர்மனின் நாட்குறிப்பை நான் படித்தேன்..."
"என்னது... சின்னண்ணாவின் நடக்குறிப்பா? அதை நான் கூடப் படித்ததில்லையே..."
"அதனால் தான் நான் படித்தேன்..."
"அதிலே பெரிதாக எதை நீ படித்தாய்... சின்னண்ணா பல்லவியைப் பார்த்தது முதல், திருமணம் செய்தது வரை தானே இருந்திருக்கும்..."
"அப்படித்தான் நானும் முதல் நினைத்துப் படிக்க வேண்டாம் என்று நினைத்தேன்... ஆனால் என்னவோ தெரியவில்லை அதை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது அதனால் முழுவதும் படித்து விட்டேன்..."
"அதைப் படித்து விட்டுத் தானா என்னை அவசரமாக வரச் சொன்னாய்... அதில் முக்கியமாகப் பேசும் விஷயம் என்று என்ன இருக்கிறது ஒன்றுமில்லையே..."
"இல்லை... இருக்கிறது... ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இருக்கிறது... நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஏன் என்று கேட்காமல் பதில் சொல்லுகிறீர்களா?"
"சரி கேள்..."
"உங்கள் சின்னண்ணா ஏதோ விபத்தில் தானே இறந்தார்?"
"ஆமாம்"
"அவரோடு உங்கள் அம்மா அப்பா மற்றும் அனுவக்காவும் தானே விபத்தில் மாட்டிக் கொண்டார்கள்"
"ஆமாம்"
"அனுவக்காவைத் தவிர மற்று மூவரும் இறந்து விட்டார்கள் தானே?"
"ஆமாம்"
"விபத்து நடந்தது பற்றி உங்களுக்கு முதலில் யார் தகவல் சொன்னது என்று நினைவு இருக்கிறதா?"
"அது..."
"சரி விடுங்கள் அதைப் பிறகு யோசிக்கலாம்... நான் கேட்கப் போகும் கேள்வி உங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் தான் ஆனாலும் தயவு செய்து நீங்கள் பதில் சொல்ல வேண்டும்..."
"அதெல்லாம் ஏற்கனவே வருத்தப்பட்டாயிற்று... நீ கேள்வியைக் கேள்... இத்தனை தூரம் நீ கேள்வி கேட்பதைப் பார்த்தாலே ஏதோ விஷயம் இருப்பது போலத்தான் தெரிகிறது..."
"ம்ம்... ஒரு விஷயம் இல்லை ஓராயிரம் விஷயம் இருக்கிறது..."
"சரி சரி கேள்வியைக் கேள்..."
"உங்கள் அம்மா அப்பா சின்னண்ணா மூன்று பேருக்கும் ஒன்றாகத் தானா இறுதிச் சடங்கு நடந்தது?"
"அப்படி எல்லாம் இல்லை... அவர்களின் உடலே கிடைக்கவில்லை... விபத்து நடந்த போது சின்னண்ணா ஓட்டிச் சென்ற வாகனம் அப்படியே மலை விளிம்பில் இருந்து விழுந்து விட்டது... இந்த மலைப் பிரதேசத்திலேயே அந்த விளிம்பு தான் அதி உயரமான இடம்... கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது... ஆனாலும் விழும் போதே பல்லவியைப் பிடித்து யாரோ வெளியே தள்ளி இருக்க வேண்டும்... அதனால் தான் அவள் மட்டுமாவது பிழைத்துக் கொண்டாள்... விஷயம் தெரிந்த போது எங்களை இந்தப் பகுதிக்கு வருவதற்குக் காவல்துறை அனுமதிக்கவே இல்லை... பல்லவியின் நிலையே படு மோசமாக இருந்தது... அவளுக்குத் தலையில் பலத்த அடி பட்டு விட்டது... இரத்தம் சொட்டச் சொட்டத் தான் அவளை இங்கே இருந்த வைத்தியசாலையில் சேர்த்து இருந்தார்கள்... அவள் கண் திறந்து பார்க்கும் வரை நானும் பெரியண்ணாவும் பட்ட அவஸ்தை இருக்கிறதே அப்பப்பா நரகம்... பல்லவியோடு நாங்கள் அலைந்ததால் விபத்துப் பற்றி விசாரித்துக் கீழே விழுந்தவர்களில் யாரேனும் இருக்கிறார்களா என்பதை அறிந்து வருவதற்கு மூர்த்தி மாமாவைத் தான் அனுப்பினோம்... ஆனால் அவர் வந்து சொன்ன தகவல் கொடுமையானது... அந்தத் துயரத்தில் இருந்து மீளவே முடியாமல் நாங்கள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை... பிறகு தான் ஒரு வழியாகப் பல்லவி கண் விழித்தாள்... அவளாவது உயிரோடு இருக்கிறாளே என்பது மட்டும் தான் அப்போது இருந்த ஒரேயொரு ஆறுதல்... "
என்று கோர்வையாகச் சொன்ன சூரியனையே பார்த்திருந்த கஸ்தூரியின் விழிகள் எதையோ உணர்ந்ததும் லேசாகப் பளிச்சிட்டது.
கஸ்தூரியின் விழிகளில் தெரிந்த ஒரு வித சந்தோசத்தைப் பார்த்த சூரியனோ
"என்ன இவள்... இவ்வளவு தூரம் ஒரு விஷயத்தைச் சொல்லி நான் கவலைப்படுகிறேனே அதற்குச் சேர்ந்து கவலைப்படக் கூடத் தேவையில்லை... இப்படிக் கண்ணால் சிரிக்காமலாவது இருக்கலாமே"
என்று எண்ணிக் கொண்டான்.
அதனை வாய் திறந்து கேட்கவும் செய்தான்.
"ஏன் கஸ்தூரி... என் கவலை உனக்குச் சந்தோசமாக இருக்கிறதா? எதற்கு இப்படிக் கண்ணால் சிரிக்கிறாய்... அதை விடவும் நன்றாகப் பற்கள் தெரியச் சிரிக்கலாமே..."
என்று நிஜமான ஆதங்கத்துடன் கேட்டான்.
கஸ்தூரியோ பதிலேதும் கூறாமல் அவனையே தான் பார்த்திருந்தாள்... ஆனால் மனம் வேறு ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.
அவளது நிலையைப் பார்த்தவனோ
"ஏய்... அப்படி என்ன தான் உனக்கு நடந்து விட்டது... ஒரு வேளை காத்துக்கருப்பு ஏதும் அடித்து விட்டதோ..."
என்றபடி அவளது முகத்தின் முன்னால் கையை அசைத்தான்.
அசைத்தவனின் கையை இறுகப் பற்றியவள் அவனைக் கிட்டத் தட்ட இழுத்துக் கொண்டு வீட்டின் அந்தக் கடைசியாக இருக்கும் அறையை நோக்கி விரைந்தாள்.
சூரியனோ தன் கையைப் பிடித்திருந்தவளின் கையையே பார்த்தபடி அவள் இழுத்த இழுப்புக்கு அவள் பின்னாலேயே சென்றான்.
அறையினுள் வந்ததும் ஓரமாக இருந்த அலுமாரியைத் திறந்து, அதிலிருந்த நாட்குறிப்பை எடுத்து ஒரு பக்கத்தை விரித்துச் சூரியனின் கையில் கொடுத்தாள்.
அந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தவனோ கஸ்தூரியை நிமிர்ந்து பார்த்து விட்டு, அருகே இருந்த கட்டிலில் தலையைப் பிடித்த படி அமர்ந்து விட்டான்.
அவனது நிலையை உணர்ந்தவள் அவன் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தபடி, தலையில் இருந்த அவனது கரத்தை விலக்கி விட்டபடி
"உங்கள் அம்மா அப்பா சின்னண்ணா எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது"
என்றாள் மெல்லிய குரலில்.
"ஆனாலும் அது எப்படிச் சாத்தியம் ஆகும்?"
"இந்த நாட்குறிப்பைப் படித்த பிறகும் நீங்கள் இப்படிக் கேட்கலாமா?"
"ஆனாலும்... உன்னாலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை தானே வெறும் ஊகம் தானே?"
"சரி நான் சொல்வது ஊகமாகவே இருக்கட்டும்... ஆனால் இன்னொரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்..."
"அதென்ன..."
"அன்றைக்கு நடந்தது விபத்து இல்லை... அது ஒரு சதித்திட்டம்..."
"என்ன? புரியவில்லை எனக்கு..."
"உங்கள் குடும்பத்தினர் விபத்தில் இறந்து விட்டார்கள் என்று நீங்கள் நினைப்பது உண்மை இல்லை... அவர்கள் ஏதோ சதி வலையில் மாட்டி இருக்கிறார்கள்..."
"ஏய்... அது புரிகிறது எனக்கு... ஆனால் அதைச் சதி என்று எப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறாய்..."
"நான் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேளுங்கள்... உங்களுக்கே புரியும்..."
"ம்ம்ம்..."
"உங்கள் குடும்பத்தினர் இங்கே குலதெய்வக் கோவிலுக்கு வந்த போது தானே விபத்து ஏற்பட்டது என்று நீங்கள் எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..."
"ஆமாம்..."
"இங்கே இந்தப் பழத்தோட்டத்தில் இருந்து பார்க்கும் போது உங்கள் குலதெய்வக் கோவில் அப்படியே தெளிவாகத் தெரிகிறது..."
"ஆமாம் தெரிகிறது அதற்கு என்ன?"
"அதற்கு என்னவா? கொஞ்சமாவது யோசிக்க மாட்டீர்களா? விபத்து நடந்த இடம் இந்த மலைப் பிரதேசத்திலேயே உயரமான விளிம்பு உள்ள இடம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்... கோவிலுக்குப் போனவர்கள் உயரமான விளிம்புக்கு ஏன் போக வேண்டும் சொல்லுங்கள்?"
என்று கேட்டவளின் கேள்வியில் ஒரு நொடி விக்கித்துப் போய் நின்றான் சூரியன்.
"இவள் என்ன சொல்கிறாள் ஒரு வேளை அப்படித் தானோ"
என நினைத்தவனுக்குத் தலை கிறு கிறுத்துப் போயிற்று...
"கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சோகத்தை சொல்கின்ற சொல்லேது ..."